ஜே.கே.ரித்தீஷ்... கோடம்பாக்கத்தின் புதிய கொடை வள்ளல்!
'புரட்சி நாயகன், அதிரடி மன்னன்' என்ற அடைமொழிகளோடு முரட்டு மீசையுடன் சிட்டி ஆட்டோக்களில் பயமுறுத்துகிறார் பார்ட்டி. வழக்கம் போல படைபரிவாரங்களோடு வடபழனி ஏரியாவில் அதகளம் பண்ணிக்கொண்டு இருந்தவருடன் ஒரு நேருக்கு நேர்!
'' 'கானல் நீர்'னு ஒரு அட்டுப்படம் கொடுத்துட்டு, நீங்க பண்ற அலப்பற உங்களுக்கே ஓவரா தெரியலியா?''''கானல் நீர் ஒரு டுபாக்கூர் படம்தான். அது என் நண்பர் சின்னிஜெயந்த்தின் அன்புக்காகப் பண்ணியது. நான் சின்ன வயசுல எத்தனையோ படங்களைப் பார்த்து செம கிண்டல் பண்ணி இருக்கேன். கடைசியில நாலு பேரு என்னைப் பார்த்துச் சிரிக்கிற மாதிரி என் முதல் படம் அமைஞ்சுபோச்சு. இத்தனைக்கும் 'கானல் நீர்' பட போஸ்டர்ல 'A True Punishment'னு கேப்ஷன்லாம் கொடுத்தேன். அந்த கேப்ஷனைப் பார்த்தாவது ஜனங்க உஷாராகட்டுமேன்னு!'' (பலமாகச் சிரிக்கிறார்.)
''எங்கே இருந்து கிடைச்சுது இவ்வளவு பணம்? நடிக்க வர்றதுக்கு முன்னாடி ராமநாதபுரத்தில் நீங்க ஒரு டீக்கடையில வேலை பார்த்தீங்களாமே?''''ஹாஹாஹா... (சிரிக்கிறார்) நான் டக்ளஸ் கிடையாது சார். ராமநாதபுரத்துல வசதியான குடும்பம் என்னோடது. என் தாத்தா சுப.தங்கவேலன் இப்ப மினிஸ்டரா இருக்காரு. ஊருல 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. மூணு ஒயின்ஷாப்புக்கு ஓனரா இருந்தேன். அழகப்பா யூனிவர்சிட்டில சிவில் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். ஆனா, நான் பிரபலமாவதைப் பிடிக்காத சில பேரு, 'கடத்தல் பண்ணேன்... சீட்டிங் பண்ணேன்'னு இல்லாத விஷயத்தைப் பரப்பிவிடுறாங்க. ஆனா, அதைக் கேட்டாலும் சந்தோஷமா இருக்கு. ஏன்னா, காய்ச்ச மரம்தானே சார் கல்லடி படும்!''
''ஏன் சார் நடிக்க வந்தீங்க?''
''சார்... யார் வேணும்னாலும் நடிக்கலாம். டான்ஸ் நல்லா ஆடுற யாருக்கும் நடிப்பு ஈஸியா வந்துடும். எனக்கு டான்ஸோட கராத்தேவும் அத்துப்படி. போதாக்குறைக்கு தி.மு.கவில் அடிமட்டத் தொண்டனாப் பணியாற்றிய அரசியல் அனுபவம் இருக்கு. இது போதாதா நடிக்க வர்றதுக்கு..? ஏன் சார், நான் நல்லாத்தானே இருக்கேன்?'' (முகத்தை சீரியஸாகக் காட்டுகிறார்)
''உங்க நடிப்பைப் பார்த்துட்டு கலைஞர் என்ன சொன்னார்?''
''கானல் நீர் கேசட் ரிலீஸ் ஃபங்ஷனுக்கு வந்த கலைஞர், 'படம் ரிலீஸானதும் எனக்கு போட்டுக்காட்டு!'னு சொன்னார். அவருக்கு உடம்புக்குச் சரியில்லாத நேரத்துல போட்டுக்காட்டி, அவரை ஏன் சிரமப்படுத்தணும்னுதான் படம் காட்டலை. எனக்குத் தெரியாதா... என் படம் எப்படி இருக்கும்னு!'' (சிரிக்கிறார்)
''உங்க படம் கானல் நீரை ஓடவைக்க பிரியாணியும் 100 ரூபாய் பணமும் ராமநாதபுரத்தில் கொடுத்தது நிஜம்தானே..?''
''சொந்த மண்ல நம்ம படம் மண்ணைக் கவ்வக் கூடாதுன்னு நினைச்சது உண்மைதான். சார், ஒரு சிம்பிள் விஷயம் சொல்றேன். நான் ஒருத்தருக்கு ஆபரேஷன் பண்ண ஒரு லட்சம் கொடுத்தா, அந்தக் கிராமமே என்னை 'வள்ளல்'னு வாயாறப் புகழுது. என் 'நாயகன்' பட பப்ளிசிட்டிக்காக சென்னையில இருக்குற 80% ஆட்டோக்கள்ல என் பட ஸ்டிக்கரை ஒட்டவெச்சேன். அதுக்கு ஒரு ஆட்டோவுக்கு மாசம் 50 ரூபாய்னு செலவு பண்றேன். ஆனா, மாசம் 1,000 ரூபாய் கொடுக்கிறதா வெளியே பேசிக்கிறாங்க. என்னத்தைச் சொல்றது?''
''ஆளுங்கட்சி சப்போர்ட்லதான் இப்படில்லாம் பண்றீங்க. ஆட்சி மாறினா, காட்சி மாறி நீங்க ஜெயிலுக்குப் போக வேண்டிய சூழல் வரும்னு சொல்றாங்களே?''
''இந்த ரேஞ்ச்ல கிளப்புறாய்ங்களா? தனக்கு மிஞ்சித்தான் தானம்னு சொல்வாங்க. ஆனா, எனக்கும் விஞ்சியது என் தானம். கடைசி பைசா இருக்கிற வரைக்கும் கொடுத்துட்டே இருப்பேன் சார். நான் நேர்மையா ரியல் எஸ்டேட் தொழில் பண்ணி சம்பாதிக்கிறேன். வருமான வரி கட்டுறேன். அதனால யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம்இல்லை. 'அப்போ சுதாகரன் பினாமி... இப்போ ஆளுங்கட்சி சுனாமி'ன்னு கிளப்பிவிடுற கூட்டத்தைப் பார்த்து பரிதாபப்படுறேன்!''
''ஊருப் பக்கம் அடுத்த எம்.பினு பேசிக் கிறாங்க?''
''என் சொந்த மண்ணுக்கு அப்படி ஒரு சேவை செய்ய வாய்ப்பு கிடைச்சா, இந்த ஜென்மமே போதும் சார். தலைமைகிட்டே ஸீட் கேட்பேன். கிடைச்சா, ஜெயிச்சுக் காட்டுவேன். உலகத்துக்குத்தான் நான் ரித்தீஷ். ஊருக்கு, நான் எப்பவுமே அதே முகவை குமாரா இருப்பேன்!''
''உங்க அடுத்த சினிமா அட்டாக் எப்போ?''
''இதோ 'நாயகன்' ரிலீஸானதும் 'தளபதி'யை ஆரம்பிக்கிறேன். சும்மா பட்டையக் கிளப்பும் பாருங்க... என்ன சிரிக்கிறீங்க? அட, நம்புங்க சார்!'' அடக்க முடியாமல், தானும் சிரிக் கிறார் ஜே.கே.ரித்தீஷ்!
நன்றி - .ஆவி.
This entry was posted
on Thursday, June 12, 2008
at Thursday, June 12, 2008
and is filed under
Adagonniya
. You can follow any responses to this entry through the
comments feed
.